தமிழரின் வேதம் எது ஆகமம் எது

150.00

150.00

Quantity
Add to cart

மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன்

நீண்ட காலமாக தமிழ் வேதம் எது? தமிழரின் வேதம் எது என்று புரிபடாமல் தமிழர்கள் எதை எதையோ நம்முடைய வேதம், ஆகமம் என்று மருண்டு அதில் அலைப்புண்டு இருக்கையில் வாராது வந்த மாமணி போல் இறைதிருவருளால் தற்போது வெனி வந்துள்ளவை தான் மேற்படி நூல்கள்.

முருகப் பெருமான் உணர்த்த நம் குருபிரான் செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் தம்முடைய உடல் நிலையைச் சிறிதும் கருதாமல் (தீவிர அறுவை சிகிச்சைக்குப் பின்) தன்னுடைய சமுதாயப்பணி, கடமை இது – இறை உணர்த்திய பணி இது – என்று இடைவிடாது ஆற்றிய பணியில் முகிழ்த்தவை தான் மேற்கண்ட இருநூல்கள்.

தமிழ் வேதம் மற்றும ஆகமம் எது என்பது பற்றி பல்வேறு உயர்ந்த சிந்தனைகளைச் சங்க இலக்கியம் தொடங்கி, புதைபொருள் ஆராய்ச்சி, வடமொழி நூல் ஆராய்ச்சி எனத் தமிழின் தொன்மை சிறப்புகளைப் பட்டியலிட்டு அதனூடே தமிழ் வேதத்தை, தமிழ் ஆகமத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் தருக்க வழி சீர் தூக்கி நிலைப்படுத்தும் அழகு ஆசிரியர் அவர்களுக்கே உரிய பாங்கு. முத்துக் குளித்தல் போன்று ஆசிரியர் நூலில் சொல்லிய சிலவற்றை எடுத்துக் கொடுக்கிறேன்.

தமிழ்ச் சான்றோர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த சிந்தனைகளின் பதிவே வேதம். தமிழ் மறையுளே அறிய வேண்டிய அறிவு மறைந்து நிற்பது, உரியவர் மூலம் தூண்டப் பெற்றால் விளங்குவது. இதனினும் மேம்பட்டதைத் தமிழ் ஆகமம் என்றது. இதுவே நிலையியல் இறை இன்ப நூல் ஆகும். இது தமிழருக்கே உரியது. வேதத்தின் மேற்சிந்தனையே ஆகமம்.

இறைவனைப் பற்றி ஆழ்ந்து புதைந்து கிடைக்கின்ற அறிவை மறைத்துக் கூறிய மந்திரங்கள் அடங்கியவை தான் மறை வேதம் என்று கூறப்பட்டன.

இதையே தொல்காப்பியர், நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப, என்றார். பகுத்தறிந்து ஆய்ந்த மொழியியலாளர்கள் தமிழை உயர்தனிச் செம்மொழி என்றனர். மறுபுறம் வள்ளலாரோ தமிழில் தோய்ந்துணர்ந்து அதனை இயற்கை சிறப்பியல் மொழி என்று உணர்த்தியிருக்கிறார்.

முன்னது ஆய்வின் பாற்பட்டது. பின்னது தோய்வறிவினால் ஏற்பட்டது, அதாவது மெய்யுணர்வால் எனலாம். தமிழ்ச் சிந்தனை உலகளாவிய அளவில் சென்று நிலைப்பட்டுள்ளது. அதனுடைய ஆழ, அகல, கூர்மை குணாதிசயங்களால். NASA விண்வெளிக்கூடத்தில் ‘கற்றது கைம்மண்ளவு கல்லாதது உலகளவு’ – ஔவையார். நயாகரா நீர் வீழ்ச்சியில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலகம் அனைத்தையும் உறவாகப் பார்க்கின்ற உயர்ந்த பார்வை தமிழ்ப் பார்வை. என பலபட நம் வேதம் ஆகமத்தை விரிக்கிறார் ஆசிரியர்! இரண்டாம் பகுதி ஒரு மறுப்பு நூலாக விரிகிறது. 1920 களில் கா.சு.பிள்ளை அவர்கள் ‘திருநான்மறை விளக்கம்’ என்ற தமிழ் நூல் வேத ஆராய்ச்சி நூலை எழுதியுள்ளார். அதற்குப் பின் 1926 ஆம் ஆண்டில் மா.சாம்ப சிவப் பிள்ளை என்பவர் மறுப்பு நூலாக ‘திருநான்மறை விளக்க ஆராய்ச்சி’ என்ற உள்ளடற்ற ஒரு நூலை எழுதினார். அது 2007 இல் மறு பதிப்பாக தி.ந.இராமச்சந்திரன் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. அதற்கு மறுப்பு நூல் வெளியிடக் கோரி நம் ஆசிரியரைப் பல பேர் வேண்டினார்கள். அது தற்போது நிறைவேறியுள்ளது பல பேருக்குப் பயன்படும் வகையில். அதில் கண்ட சில கருத்துக்கள் . . . அருளாளர்கள் சொல்வதில் ஒன்றிற்கொன்று முரண் இராது. ஆனால் புராணிகர்கள் எல்லாம் அருளாளர்கள் அல்லர். எனவே புராணங்கள் எப்போதும் முரண்பாடுகளின் மூட்டையாகவே உள்ளன. சொல்லின் ஆற்றலை மறைத்துச் சொல்வது மறை தமிழ் மறை! பிறருக்கு மட்டுமே மறைப்பது மறை அல்ல (வடமொழி) ‘மறைமொழி தானே மந்திரம் என்ப’ – தொல்காப்பியம். ஆந்தை, பாம்பு, புலி, சிங்கம் என்று குழூஉக்குறியாகக் கூறிய பெயர்கள் நான்கு தன்மைகளை உடைய முனிவர்களே ஆல நிழலில் உபதேசம் பெற்றவர்கள். நினைத்தவரைக் காப்பாற்றுவேன் என்று சொல்லித் தண்டிக்கவும் வாய்ப்புள்ள வடமொழி மந்த்ரம் சிறந்ததா? மாறாக நினைப்பவர் நினைத்ததை அவருக்கு வேலையாளாக நின்று செய்து தரும் தமிழ் மந்திரம் சிறந்ததா? திரு. சாம்பசிவப் பிள்ளையின் போலி வாதங்கள், முன்னுக்குப் பின் முரணான செய்திகள், தனக்குத் தானே மறுத்தல், தந்நிலை மறத்தல், தவறான மேற்கோள், தந்நிலை மாறல், தோல்வித்தானம் ஏற்றல் என அவருடைய வாதக் கருத்துக்கள் வெளிப்படுகின்றன. நம் ஆசிரியர் பரபக்க பார்வையாக அம்மறுப்பு நூலை அணுகி பதிலளிக்க இறுதியில் வெற்றிக்களத்தில் நிற்பவர் நம் ஆசிரியரே! தமிழரின் வேதம் எது ? ஆகமம் எது? & அறத்தமிழ் வேதம் ஆகிய இருநூல்களை உடனடியாக வாங்கிப் பயனடைவீர்! உற்றார் உறவினர்களை வாங்கச் செய்து செம்மாந்து இருக்கும் செந்நெறியில் வாழ்ந்திடச் செய்வீர்!!

X